"சினிமாத்துறையில் புகழ் பெற்று பெரிய டைரக்டராக வர வேண்டும் என்கிற ஆசையில் இருக்கிறான் கைலாஷ். அவனுடைய மனைவி தேவி. கைலாஷ் அடிக்கடி சென்னை சென்று விட்டு வருபவன். அப்படி ஒரு நாள் சென்னைக்குப் போய்விட்டு டிஸ்கஷனில் கலந்து கொண்டு விட்டு ரயில் மூலம் கோவை திரும்பி வீட்டுக்கு வருகிறான் கைலாஷ். வீடு பூட்டிக்கிடக்கிறது. தன்னிடம் இருக்கும் சாவி மூலம் வீட்டுக்குள் போகிறான். தேவி வீட்டில் இல்லை. அவள் எங்கே போனாள் என்று விபரம் தெரியாமல் போகவே போலீஸில் புகார் தருகிறான். ஆனால் போலீஸால் தேவி எங்கே போனாள், அவளுக்கு என்னவாயிற்று என்பதைக் கண்டுபிடிக்க முடியாததால் க்ரைம் ப்ராஞ்ச் ஆபீஸர் விவேக் தேவியைத் தேடும் புலனாய்வை மேற்கொள்கிறார். புலனாய்வில் விவேக்கிற்கு தேவியைப்பற்றி புதிது புதிதாய் புதிரான தகவல்கள் கிடைக்கின்றன. அந்த தகவல்களை நம்பி விசாரணையில் இறங்கினால் நம்ப முடியாத அளவுக்கு வேறு தகவல்கள் கிடைக்கின்றன. கணவன் கைலாஷும் போலீஸின் சந்தேக வளையத்திற்குள் வருகிறான். இத்தனை குழப்பங்கள் இருந்தாலும் விவேக் புலனாய்வை திறம்பட நடத்தி வழக்கின் முடிச்சுகளை அவிழ்க்கும்பொழுது திடுக்கிடும் உண்மைகள் வெளிவருகின்றன. இது ஒரு ஃபேமிலி த்ரில்லர்."