எனக்கு இரதம் எதுவும் கிடையாது. ஏற்கனவே, எனது கார் நிலத்தில் பதிந்துதான் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆகவே, நிறையப் பொய்களைத் துணிந்து சொல்லலாம். ஆனாலும், ஒரு எழுத்தாளர் பொய் சொல்வதற்கு முன்பாக நிறைய யோசிக்க வேண்டும். இன்று துணிந்து பொய் கூறினால், நாளை உண்மை சம்பவங்களைப் பற்றி எழுதும் போது, ஆதாரங்களைத் தந்தாலும், அவற்றை வாசகர்கள் நம்ப மறுப்பார்கள். சரித்திர நாவல்களை எழுதும்போது, "நீங்கள் எழுதுவது உண்மை சம்பவங்களா அல்லது கற்பனையா..." என்பது போன்ற கேள்விகள் எழாமல் இருக்காது. சரித்திரக் கதைகளைப் படிக்கும் வாசகர்கள், உண்மையான கதாபாத்திரங்களை கற்பனை என்றும், கற்பனை பாத்திரங்களை உண்மையானவை என்றும் கருதக்கூடிய வாய்ப்புகள் அதிகம். காரணம், "நமது கற்பனை பாத்திரம்தானே..." என்று சரித்திர எழுத்தாளர்கள் தங்கள் கற்பனை பாத்திரங்களுக்கு முன்னுரிமை தந்து அவற்றினைச் சிறப்பாகப் படைத்துவிடுகின்றனர். எனவேதான், கற்பனை பாத்திரங்களான நந்தினியும் ஆழ்வார்க்கடியானும், இன்றுவரை நம் மனதினில் வாழ்ந்து வருகின்றனர். நான் கூடியவரையில் நிஜ பாத்திரங்களை சரித்திரத்தில் கண்டது போலவே சித்தரித்து வருகிறேன். குறிப்பாக, இந்தக் கதையின் மைய பாத்திரங்களாக வருபவர்களின் குணநலன்களை சரித்திரத்தில் உள்ளபடிதான் படம் பிடித்திருக்கிறேன்.
தர்மரைப் போன்று நானும் ஒரே ஒரு பொய்யினை முதன்முறையாக சொல்கிறேன்.
"இந்தக் கதை முழுவதும் என் கற்பனையில் உதித்தது தான்!"
- ‘காலச்சக்கரம்’ நரசிம்மா
குறிப்பு: இந்தக் கதை 918 கி.பி. தொடங்கி, 957 கி.பி. அரிஞ்சய சோழனின் மர்மமான திடீர் மரணம் வரையிலான காலக்கட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை மையமாகக் கொண்டுள்ளது.
டி ஏ நரசிம்மன் என்கிற காலச்சக்கரம் நரசிம்மா கடந்த முப்பத்தி ஐந்து வருடங்களாக பத்திரிக்கையாளராக திகழ்கிறார். இவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் தனது பணியை துவக்கியவர் தற்போது . தி ஹிந்து ஆங்கில நாளிதழின் நிர்வாக ஆசிரியராக இருக்கிறார். சுமார் 15 நாவல்களை எழுதி இருக்கும் இவரது முதல் நாவல் காலச்சக்கரம், வெளியிடப்பட்டு பரபரப்பாக விற்பனையாக, இவரது பெயர் காலச்சக்கரம் நரசிம்மாவாக மாறியது. இவரது ரங்கராட்டினம் நாவலை படித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரை அழைத்து பேசி பாராட்டி, திருவரங்கத்தில் போட்டியிட போவதாக அறிவித்தார். சங்கதாரா , பஞ்ச நாராயண கோட்டம், கர்ணபரம்பரை, குபேரவன காவல், அந்தப்புரம் போகாதே அரிஞ்சயா போன்ற இவரது நாவல்கள் இவருக்கு தனி வாசகர் வட்டத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளன. தற்போது இவர் எழுதியுள்ள ஐந்து பாகங்களை கொண்ட அத்திமலைத்தேவன் பெரும் பரபரப்புடன் விற்பனையாகி கொண்டிருக்கிறது.
சின்ன திரைகளில் கிருஷ்ணா காட்டேஜ், அபிராமி, அனிதா வனிதா, மாயா போன்ற தொடர்கள் உள்பட பல தொடர்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறார். சிங்கப்பூர் தமிழ் முரசுக்கு சிறப்பு அரசியல் விமர்சகராகவும் கட்டுரைகள் எழுதி உள்ளார்.
பிரபல திரைப்பட இயக்குனரும் நகைச்சுவை வசனகர்த்தா சித்ராலயா கோபு, மற்றும் எழுத்தாளர் கமலா சடகோபனின் மகன் ஆவார். இவரது மகன் ஷ்யாம் திருமலை என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா, என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் துணை மற்றும் இணை இயக்குனராகவும், மகள் ஸ்ரீயந்தா இயக்குனர் ராதாமோகனின் காற்றின் மொழி மற்றும் பொம்மை படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி உள்ளனர்.
குமுதத்தில் தற்போது மூவிடத்து வானரதம் என்கிற சரித்திர தொடர்கதையை எழுதி வருகிறார்.
காலச்சக்கரம் நரசிம்மா அவர்களை [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்